தி ஹேக் (நெதர்லாந்து): துன்புறுத்தல்கள், அட்டூழியங்களில் இருந்து ரோஹிங்யா முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மியன்மார் அரசாங்கத்திற்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்யா சமூகத்தினர் மீது தொடுக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான சான்றுகளைப் பாதுகாக்கவும் மியன்மாரை அனைத்துலக நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி கடந்த மாதம் தம் நாட்டின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தற்காத்துப் பேசியபோதும் அந்நாட்டிற்கு எதிராக அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா இனத்தவர் மாண்டுபோயினர்; 700,000க்கும் மேற்பட்டோர் அண்டை நாடான பங்ளாதேஷில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், அத்தகைய இன அழிப்பு நடவடிக்கை மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசாரணை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து, முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா, மியன்மார் ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துலக நீதிம்னறத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ரோஹிங்யா மக்களைப் பாதுகாத்து, இன அழிப்பைத் தடுப்பதற்கு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை மியன்மார் எடுக்கவேண்டும் என்று 17 நீதிபதிகள் அடங்கிய குழு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
தனது தீர்ப்பை நடைமுறைப்படுத்த அனைத்துலக நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றபோதும் அதை ஏற்றுக்கொண்டு நடப்பதைத் தவிர மியன்மாருக்கு வேறு வழியில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.
ஆங் சான் சூச்சி மறுப்பு
இதனிடையே, மியன்மாரில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆனால் இன அழிப்பு நடைபெறவில்லை என்றும் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை ரோஹிங்யா அகதிகள் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைக் குழுக்களும் ஐநா விசாரணை அதிகாரிகளும் புனைந்த ஆதாரமற்ற கட்டுக்கதை களுக்கு மியன்மார் பலியாகி விட்டது என்று அவர் கூறியதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
உள்நாட்டுச் சட்ட நடைமுறைகள் மூலமே மியன்மாரால் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அனைத்துலக நீதிமன்றத்தில் தமது தரப்பு வாதத்தை முன்வைத்துப் பேசியபோது, மியன்மார் ராணுவ நிலைகள் மீது ரோஹிங்யா போராளிகள் தாக்குதல் மேற்கொண்டதால் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, பின்னர் வன்முறை வெடித்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.