ஆக்லாந்து: சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களக்காப்பின்போது தோள்பட்டையில் காயமடைந்ததால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு அக்டோபரில் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அதற்குச் சரியான வீரர்களை அடையாளம் காண நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு நல்ல வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.
ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் என விக்கெட் காப்பாளர்கள் இருவர் இருந்தாலும் லோகேஷ் ராகுலே இன்றும் விக்கெட் காப்புப் பணியைத் தொடரக்கூடும் எனச் சூசகமாகக் கூறினார் கோஹ்லி. அப்படி, ராகுல் விக்கெட் காப்பாளராகச் செயல்பட்டால் இன்னொரு பந்தடிப்பாளருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்றும் அவர் சொன்னார்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தமட்டில், மேட் ஹென்ரி, டாம் லேதம், சேத் ரேன்ஸ், டக் பிரேஸ்வெல், வில் யங், ஆடம் மில்ன் எனப் பல வீரர்கள் காயம் அடைந்திருப்பது பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஹமீஷ் பென்னட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
டி20 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைவிட ஓரிடம் பின்தங்கி, அதாவது ஆறாவது இடத்தில் உள்ளது நியூசிலாந்து. இருந்தாலும், இவ்விரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் மோதியிருக்கும் நிலையில், அதில் எட்டு முறை நியூசிலாந்து அணியே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.