இளம் நாயகி தான்யா ஹோப்பை கோடம்பாக்கத்து ரசிகர்கள் சிலர் மறந்திருக்கலாம். கடந்தாண்டு வெளியான ‘தடம்’ படத்தில் நடித்தவர்.
அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த அந்தப் படம் விமர்சன, வசூல் ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் தான்யாவை அதன் பிறகு தமிழ்ப் படங்கள் எதிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் அசத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாரம் அவர் தெலுங்கில் நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.
“தமிழில் எனது முதல் படமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. எனினும் அவசரப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்கவில்லை. சற்று நிதானமாகச் செயல்பட்டு படங்களைத் தேர்வு செய்து நடிக்க முடிவு செய்தேன். அதற்கேற்ப ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார் தான்யா. இந்தியில் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் மறுபதிப்பாக உருவாகும் ‘தாராளபிரபு’ படத்தில்தான் ஹரிசுடன் நடிக்கிறார் தான்யா. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாம்.
“இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. அநேகமாக மார்ச் இறுதிக்குள் இப்படம் வெளியாகிவிடும். எனவே, புதுக் கதைகளைக் கேட்டு வருகிறேன்.
“என்னைப் பொறுத்தவரை எத்தகைய வேடமாக இருந்தாலும் அது நம் மனதுக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த விஷயத்தையும் செய்ய முடியாது. இது நாம் செய்யும் எல்லாப் பணிகளுக்குமே பொருந்தும்.”
தற்போது இவர் தெலுங்கில் நடித்துள்ள ‘டிஸ்கோ ராஜா’, கன்னடத்தில் நடித்துள்ள ‘காக்கி’ ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளன. அவற்றை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு ஊராக விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறாராம்.
மூன்று மொழிகளில் மாறி மாறி நடிப்பது சிரமமாக இல்லையா?
“சற்று சிரமம்தான். கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
“அதனால் நிகழ்ச்சிகளுக்கான நேரத்தில் சில மாற்றங்களைச் செய்து சமாளிக்க வேண்டி உள்ளது.
“அதேசமயம் எத்தகைய மொழியாக இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடித்தாலே போதும்.
“ஒரு படம் வெற்றி பெறவேண்டும் என்பதில் மற்ற கலைஞர்களைவிட இயக்குநர்களுக்குத்தான் கவலை அதிகமாக இருக்கும்.
“இதை மனதில் கொண்டுதான் ஒரு படத்தை இயக்கப் போவது யார், தொழில்நுட்பக் கலைஞர்கள், கதை ஆகிய விவரங்களை முதலில் தெரிந்துகொள்கிறேன்.
“அதன் பிறகே அந்தப் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என முடிவு எடுப்பேன்,” என்கிறார் தான்யா.
தாம் குறிப்பிட்ட ஒரு திரையுலகைச் சார்ந்த நடிகை என்று யாரும் சொல்லிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்பவர், தம்மை இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகை என்று குறிப்பிடுவதையே விரும்புகிறாராம். கலை என்பதற்கு எல்லைகள் ஏதும் இல்லை. “இனி அத்தகைய எல்லைகள் தேவைப்படாது,” என்கிறார் தான்யா.