சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்ட வருமான வரித் தொகை 68 விழுக்காடு கூடி இருக்கிறது.
கடந்த 2014 முதல் 2019 வரை இந்த அதிகரிப்பு இடம்பெற்று இருக்கிறது என்று சென்னை வருமான வரி தலைமை ஆணையர் அனு ஜே சிங் தெரிவித்தார்.
இந்தத் துறையின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அதே காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 80 விழுக்காடு கூடி இருப்பதாகக் கூறினார்.
நியாயமான வரிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து, வரி உயர்வு இருந்தால் அதைப் படிப்படியாக அமல்படுத்தி, தொழில்நுட்பங்களை நவீனமாக்கி, மக்கள் தாங்களே முன்வந்து வரிசெலுத்துவதை எளிதாக்கி இவற்றின் வழி நாட்டு உருவாக்கத்தில் பங்கு கொள்வதே தனது துறையின் இலக்கு என்றாரவர்.
பொதுவாகப் பார்க்கையில் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்ட வருமான வரித் தொகையில் இடம்பெற்று இருக்கும் அதிகரிப்பு கணிசமானதாக இருக்கிறது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆணையர் மேலும் தெரி வித்தார்.