பூந்தமல்லி: சென்னை அண்ணா நகர் அருகே உள்ள பாடிப் புது நகரை சேர்ந்தவர் தங்கச்சாமி (57) கிண்டியில் உள்ள பொருளியல் குற்றப்பிரிவு துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப்பந்தாங்கலை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு மணப்பெண் அறைக்குச் சென்று பார்த்தபோது மணப்பெண் அறையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அங்கு வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத சிலர் கொள்ளை அடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்துப் பூந்தமல்லி காவல்துறை நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மணப்பெண் அறையில் சோதனை செய்தபோது அங்கிருந்த அலமாரி ஒன்றில் வைத்திருந்த சுமார் 40 சவரன் நகை இருப்பது தெரியவந்தது. மற்றோர் அலமாரியில் இருந்த 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்புப் புகைப்படக் கருவியை ஆய்வு செய்தபோது அதில் 2 பேர் மணப்பெண் அறையில் உள்ள நகையைக் கொள்ளை அடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்துப் பூந்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருமண மண்டபத்தில் நடந்த காவல்துறை அதிகாரி மகள் திருமணத்தில் துணிகரமாக நகையைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.