கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்
ராமநாதபுரம், விழுப்புரத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,041 கோடி மதிப்பில் இந்த திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.
அனைத்துப் பேருந்துகளிலும் கேமரா
நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்குத் தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும். விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாகவும் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவு வதற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாயும் தொழில் துறைக்கு ரூ.2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கு ரூ.11,894 கோடி நிதி
வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும். கரும்பு விவசாயிகளின் பாசனத் திட்டத்துக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,364 நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயிர்க் கடனாக ரூ.11,000 கோடி வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.