லண்டன்: சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் காற்பாந்துப் போட்டிகளில் விளையாடுவதற்கு நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு ஈராண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அக்குழுவுக்கு 30 மில்லியன் யூரோ (S$45 மில்லியன்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நிதி விதிமுறைகளில் அக்குழு கடுமையான முறைகேடு செய்திருப்பது நிரூபணமானதை அடுத்து ஐரோப்பிய காற்பந்தின் நிர்வாகக் குழு இந்தத் தடையையும் அபராதத்தையும் விதித்துள்ளது.
இதையடுத்து மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2012க்கும் 2016ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அக்குழு சமர்ப்பித்த கணக்குகளில் விளம்பர வருவாயை அது மிகைப்படுத்தியதாக கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடங்கப்பட்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க மேன்சிட்டி தவறிவிட்டதாகவும் ஐரோப்பிய காற்பந்து நிர்வாகக் குழு குற்றஞ்சாட்டியது.
மேன்சிட்டிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்தக் கடுமையான நடவடிக்கையால், சாம்பியன்ஸ் லீக் போட்டி மூலம் கிடைக்கும் 170 மில்லியன் பவுண்ட் (S$300 மில்லியன்) வருவாயை அக்குழு இழக்கும்.
தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மேன்சிட்டி கொந்தளித்துள்ளது. விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாக அக்குழு சூளுரைத்துள்ளது.
“இன்றைய (நேற்று முன்தினம்) தீர்ப்பு மான்செஸ்டர் சிட்டிக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் ஆச்சரியம் தரவில்லை,” என்று அக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் மேல்முறையீடு செய்ய மேன்சிட்டி திட்டமிட்டுள்ள அதேவேளையில், இத்தடை உத்தரவுக்கு கார்டியோலா என்ன பதலளிக்கப் போகிறார் என்பதைக் காண காற்பந்து உலகம் காத்திருக்கிறது. நடப்பு லீக் பருவம் முடிவடைந்த பிறகு, மேன்சிட்டியிலிருந்து அவர் பதவி விலகுவாரா என்பதே அந்தக் கேள்வி.
பார்சிலோனா, பயர்ன் மியூனிக் போன்ற ஜாம்பவான் குழுக்களின் முன்னாள் நிர்வாகியான கார்டியோலா, 2016ஆம் ஆண்டில் மேன்சிட்டியில் நிர்வாகி பொறுப்பை ஏற்றார்.
மேன்சிட்டியுடன் அவர் கொண்டுள்ள ஒப்பந்தம் அடுத்த ஆண்டுதான் முடிவுடையும் என்றாலும், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக குழுவிலிருந்து அவர் முன்கூட்டியே வெளியேறுவதற்கான ஒரு சில நிபந்தனைகளும் அவரது ஒப்பந்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேன்சிட்டி குழுவின் இரு இயக்குநர்களுடன் கார்டியோலாவுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், அவமானப்படுத்தும் இந்தத் தடை உத்தரவிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழி எதுவும் இல்லையெனில், அபுதாபியைச் சேர்ந்த மேன்சிட்டி உரிமையாளரான ஷேக் மன்சூருக்கும் கார்டியோலாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.