புதுடெல்லி: மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பதவிஏற்பு நிகழ்ச்சியில் கெஜ்ரிவாலுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கெஜ்ரிவாலுடன் சேர்ந்து 6 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் மேடையில் அமரவைக்கப்பட்டனர்.
பதவி ஏற்பு விழாவுக்குப் பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர் முன்பே திட்டமிட்டிருந்தபடி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
நேற்றைய நிகழ்வுக்காக சுமார் மூவாயிரம் போலிசார், துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.