திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மிக வயதான தம்பதியர் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு உள்ளவர்களிடமும் மருத்துவத் துறையினர் மத்தியிலும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
கேரளாவின் பத்தனந்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆப்ர ஹாம். 93 வயதான இவர், தன் மனைவி மரியம்மாவுடன் (வயது 88) ரன்னி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது மூன்று மகன்களில் ஒருவர் தன் மனைவி, மகனுடன் இத்தாலி சென்று வந்தார். நாடு திரும்பிய பிறகு அம்மூவருக்கும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் குணமடைந்து விட்டபோதிலும் தாமஸ் ஆப்ரஹாமுக்கும் அவரது மனைவிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உலகெங்கும் ஆயிரக்கணக் கான உயிர்களை பலி வாங்கி யுள்ள கொரோனா கிருமியால் வயதானவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் 90 வயதை கடந்த தாமஸ் ஆப்ரஹாமும் 88 வயதான மரியம்மாவும் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்ட பிறகும் தன்னம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரது உடல்நிலையும் மோசமடைந்தபோதிலும் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இத்தம்பதியர் குணமடைந்திருப்பது ஓர் அதிசயம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றியதே தமது தாத்தாவும் பாட்டியும் கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரக் காரணம் என தாமஸின் பேரன் ரிஜோ மோன்சி தெரிவித்துள்ளார்.
தாத்தா தாமசுக்கு மது, புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் என எந்தவித கெட்டபழக்கமும் இல்லை என்றும் உடற்பயிற்சிகூடத்துக்குச் செல்லாமலேயே திடகாத்திரமான உடல்வாகுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தாத்தாவுக்குப் பழங்கஞ்சியும் தேங்காய் சட்னியும்தான் பிடித்தமான உணவு. சிகிச்சையின்போதுகூட அவற்றைத்தான் கேட்டார். மரவள்ளிக்கிழங்கும் பலாப்பழமும்கூட அவருக்குப் பிடிக்கும்.
“பாட்டிக்கு மீன்தான் பிடித்தமான உணவு. இருவரும் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பக் காத்திருக்கிறோம்,” என்கிறார் ரிஜோ மோன்சி. தாமஸ் ஆபிரஹாம் மரியம்மா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள், ஏழு பேரக் குழந்தைகள், 14 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.