கொச்சி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 112 பேரை சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.
இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில தினங்களாக கேரளாவில் சிக்கித் தவித்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்க நேர்ந்தது.
தங்கள் குடிமக்களைத் தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு சில நாடுகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.இதையடுத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் நாட்டவர்கள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சிறப்பு விமானம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.