சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைத்து வயதுப் பிரிவினரும் இதனால் பாதிக்கப்பட்டாலும், அனைவரதும் நலனைக் கருதி மக்கள், குறிப்பாக முதியோர் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தாம் வசிக்கும் அடுக்குமாடி வீட்டிற்கு வெளியே பூட்டப்பட்டிருக்கும் சைக்கிளை எடுத்து மின்தூக்கியின் வழி இறங்குவார் முஹம்மது காசிம் முஹம்மது யூசுஃப், 73.
வீட்டிற்கு அருகிலுள்ள தாசெக் உதாரா பள்ளிவாசலுக்கு சைக்கிளில் செல்வார் இவர்.
அங்கு தொழுகை மேற்கொள்ள வருவோரில் முதன்மையானவர் இவர். அங்கு இருந்து அனைவரையும் இவர் வரவேற்பது தினந்தோறும் காணும் காட்சி.
அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடமைப்புப் பேட்டைகளிலிருந்து தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருபவர்களுக்கும் நன்கு பரிட்சயமானவர் திரு காசிம்.
இஸ்லாமிய சமயத்தின்படி, முஸ்லிம்கள் ஒரு நாளில் ஐந்து முறை தொழுகை மேற்கொள்ளவேண்டும். மற்றவர்களோடு சேர்ந்து பள்ளிவாசலில் தொழுவது சிறந்தது. அல்லது வசதிக்கேற்ப வீட்டிலேயோ இருக்கும் இடத்தில் சுத்தமான பகுதிகளிலோ தொழலாம்.
அந்த வகையில் தினமும் ஐந்து வேளையும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை மேற்கொள்வதை திரு காசிம் இயல்பாக்கிக்கொண்டுள்ளார்.
அதிகாலை ஐந்து மணியளவில் ‘சுபுஹ்’, மதியம் ஒரு மணியளவில் ‘லுஹர்’, மாலை நான்கு மணியளவில் ‘அசர்’, மாலை ஏழு மணியளவில் ‘மஹ்ரிப்’, இரவு எட்டு மணியளவில் ‘இஷா’ என ஐந்து வேளை தொழுகைக்கும் கடந்த 20 ஆண்டு களாக இவர் பள்ளிவாசலில் தொழுது வந்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வீட்டிலேயே தொழுகை மேற்கொண்டு வரும் திரு காசிம், தற்போதைய சூழ்நிலையைப் பற்றி மனம் உருகிறார்.
“நீண்டகாலமாக பழகிப்போன ஒன்றை திடீரென மாற்றுவது போன்ற உணர்வு இது. தற்போதைய நிலை மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதுபோல தோன்றுகிறது. திட்டுமுட்டாகவே உள்ளது.
“தொடக்கத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்ற மனநிலையில் இருந்தேன். படிப்படியாக மாற்றங்களை ஏற்றுக்கொண்டேன்,” என்றார் திரு காசிம்.
“இன்னும் மூன்று வாரங்களில் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. தினமும் இரவு நேரங்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகை நீளமானது.
“முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து தொழுவதே சிறப்பு. இவ்வாண்டு நோன்பு நோற்கும் மாதம் என் வாழ்நாளில் நான் இதுவரை கண்டிராத பெரிய மாற்றம்,” என்றும் இவர் தெரிவித்தார்.
கூடிய விரைவில் கொரோனா கிருமித்தொற்று நிலவரம் கட்டுக்குள் வந்து அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று தாம் இறைவனிடம் பிரார்த்தித்து வருவதாக இவர் கூறினார்.