உள்ளூரில் நடைபெறும் ‘சன்டெளன்’ நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பங்கெடுப்பவர் திரு க.சந்திரசேகரன், 74 (படம்).
கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தைக் கருதி அதிகமானோர் கூடும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொறியாளராக பணிபுரியும் இவரால் இவ்வாண்டு ஓட்டத்தில் பங்குபெற முடியாது.
இருப்பினும், தினசரி வாழ்க்கைமுறையில் பெரும் பாதிப்பில்லை என்றும் தாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதாக குறிப்பிட்டார். வாரநாட்களில் இவர் தாம் வசிக்கும் அடுக்குமாடி வீட்டில் மாடிப்படி ஏறுவது, ஆறு கிலோ மீட்டர் தூரம் ஓடுவது, வீட்டிலிருந்தவாறு சைக்கிள் உடற்பயிற்சி சாதனத்தைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
வாரயிறுதி நாட்களில், வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தம் மனைவி ச.மனோன்மணியுடன் நடைபயிற்சியில் திரு சந்திரசேகரன் ஈடுபடுகிறார்.
கடைத்தொகுதிக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டதுடன் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதையும் இவர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
லிட்டில் இந்தியாவில் காய்கறிகள் வாங்கிவிட்டு இவர் உடனே வீட்டிற்குத் திரும்பிவிடுவார்.
தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் இவர், சமூக இடைவெளியை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பாதுகாப்பான முறையில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம் என கருதுகிறார்.
‘முடிந்தவரை வீட்டில் இருக்கிறேன்’
வாரத்தில் மூன்று முறை கோயிலுக்குச் செல்லும் திருவாட்டி மு.ஞானம்மாளுக்கு (படம்) வழக்கம்போல அங்கு பிரார்த்தனை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு வழக்கமாக செல்லும் இவர், பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு செல்லவில்லை. இவர் பல ஆண்டுகளாக ஆலயங்களில் தொண்டூழியப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர்.
பூன்லே ‘ஸோன் எச்’ வசிப்போர் குழுத் தலைவரான இவர், கொவிட்-19 தொடர்பான உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மைக் காலமாக இவரது வட்டாரத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்காக முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளை விநியோகிக்க இவர் உதவினார். கிருமிப் பரவி வரும் நிலையில், தாம் ஆற்றும் சேவை முக்கியமானது என்பதை இவர் உணர்கிறார்.
“வழக்கமாக ஈடுபடும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. எனினும், அண்மையில் என் தம்பிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையைப் பராமரிக்க நான் உதவி வருகிறேன். முடிந்தவரை வீட்டில் இருக்கிறேன்,” எனத் தெரிவித்தார் ஞானம்மாள், 65.
‘தொடர்ந்து பிரார்த்திக்கிறேன்’
வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் திருவாட்டி அ.ஆதிலட்சுமிக்கு (படம்) உள்ளது. ‘இயேசு ஜீவிக்கிறார் திருச்சபை’ தேவாலயத்திற்கு வாரத்திற்கு மூன்று முறையாவது சென்று வந்த இவர், தற்போது வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளை மேற்கொள்கிறார்.
“வயதான காலத்தில் கடவுளுடன் தொடர்பை நெருக்கமாக்கிக்கொள்வது இயல்பு. திருச்சபைக்கு செல்ல முடியாததை எண்ணி வருந்துகிறேன். ஆனாலும், வீட்டிலிருந்தவாறு தினமும் காலையில் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்,” என கூறினார் திருவாட்டி ஆதிலட்சுமி, 68.
தற்போதைய நிலவரத்தைக் கருதி, கடந்த சில வாரங்களாக இவர் ஈரச் சந்தைக்கும் செல்லவில்லை. வீட்டிற்கு தேவையான கறி, மளிகைப் பொருட்களை வாங்க இவரது இல்லப் பணிப்பெண் உதவி வருகிறார்.
எங்கும் வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் முதியவர்களுக்கு பல சிந்தனைகள் அலைமோதுவதாக தெரிவித்த திருவாட்டி ஆதிலட்சுமி, நேர்மறையாத சிந்தனைகளுக்கு வழிவகுக்க தமது கவனத்தைச் சமையல் பக்கம் திருப்புவதாகக் கூறினார்.
அன்றாடம் மூன்று வேளையும் இவர் வீட்டில் உணவு சமைக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்து பரிமாறுவதில் ஒருவித திருப்தி அவருக்கு கிடைக்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் அரசாங்கம் எதற்கு வெவ்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணர்வதாக குறிப்பிட்ட திருவாட்டி ஆதிலட்சுமி, நிலைமை சீராகி, வழக்க நிலைக்கு திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறார், தொடர்ந்து அதற்காக பிரார்த்தித்து வருகிறார்.