கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் தமது அமைச்சர்நிலை அறிக்கையை இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். நிதி அமைச்சு இந்தத் தகவலைத் தெரிவித்தது.
அதில் வர்த்தகங்கள், ஊழியர்கள், குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டத்தை (Solidarity Budget) அவர் அறிவிப்பார்.
“கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் தனது வரலாற்றிலேயே முதன்முதலாக பள்ளிகளை ஒரு மாத காலத்துக்கு மூடுகிறது. கொவிட்-19 கிருமிப் பரவலால் உள்ளூரிலும் உலக அளவிலும் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளியல் ஏற்கெனவே பேரடி வாங்கியிருக்கும் வேளையில் நமது மக்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை.
“இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன,” என்று திரு ஹெங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஐக்கியப்படுத்தும் வரவுசெலவுத் திட்டமும் மார்ச் 26ஆம் தேதி மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அவ்விரு திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட $55 பில்லியன்.
வேலைகளைப் பாதுகாப்பது, நிறுவனங்கள் உடனடி சவால்களை எதிர்கொள்ள உதவுவது, பொருளியல் மற்றும் சமுதாய மீள்திறனை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களில் இந்த வரவுசெலவுத் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன.
“ஐக்கியம், மீள்திறன், ஒற்றுமை - மக்களாக நாம் யார் என்பதை இந்தப் பண்புநலன்கள் எடுத்துக்கூறும்,” என்று கூறிய துணைப் பிரதமர் ஹெங், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரை இந்தத் தலைமுறையின் முக்கிய அத்தியாயம் என வர்ணித்தார்.
நாட்டிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்து சேமித்துக் கொடுத்த முந்தைய தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
“எந்தவோர் அலையையும் போல இந்த அலையும் தணிந்தவுடன், நாம் ஒரு வலுவான சமுதாயமாக நமது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் அவர்.
துணைப் பிரதமர் ஹெங்கின் வரவுசெலவுத் திட்ட அறிக்கை பல்வேறு செய்தித் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மார்ச் 26ஆம் தேதி அவர் தாக்கல் செய்த மீட்சிக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை குறித்த விவாதமும் நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.
அந்த விவாதத்தை துணைப் பிரதமர் ஹெங் நாளை முடித்து வைப்பார்.