மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கெனவே கொரோனாவால் மூவர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் இறந்துள்ளார். கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் இறந்ததையடுத்து, தாராவியில் மரண எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தாராவியில் கொரோனா கிருமிப் பரவல் மோசமடைந்திருப்பதால் சமூக பரவலைத் தடுக்க அங்குள்ள 7.5 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று உறுதிசெய்யப்பட்டது.
இதன்மூலம் கிருமித்தொற்றால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1,666 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.