புதுடெல்லி: நேதாஜியை போர் குற்றவாளி என்று குறிப்பிடும் நேருவின் கடிதம் போலியானது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த அசுதோஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில தலைவர்களை மட்டும் உயர்வானவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்ட பாஜக சார்பில் சதி மேற்கொள்ளப்படுகிறது என குற்றம்சாட்டினார். "முதலில் சர்தார் வல்லபாய் படேலை நாட்டின் மிகப்பெரிய தலைவராகக் காட்ட முயற்சி மேற்கொண்டார்கள்.
சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடாதவர்கள், நாட்டுக்காகத் தியாகம் செய்யாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இப்போது காந்தி, நேரு போன்ற தலைவர்களின் புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள்," என்று அசுதோஷ் கூறினார். நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். இந்த ஆவணம் ஒன்றில் 1945ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமருக்கு ஜவகர்லால் நேரு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது.