நினைவாற்றலை ஒருநிலைப்படுத்தும் குடும்பங்களுக்கான வெட்டி ஒட்டும் போட்டி, பௌத்த சமயத்தில் இணைவோருக்கான அடைக்கலம் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள பௌத்த பாடகர்களும் இசைக் கலைஞர்களும் வழங்கும் அனைத்துலக இசை நிகழ்ச்சி ஆகியவை நேற்று விசாக தினக் கொண்டாட்டங்களின் அங்கங்களாக இணையத்தில் வலம் வந்தன.
கௌத்தம புத்தரின் பிறப்பு, தெளிவு பெற்றல், மரணம் ஆகிய மூன்றும் நிகழ்ந்த நாள்தான் விசாக தினம்.
கொரோனா கிருமித்தொற்று உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், உலக நாடுகளிலும் சிங்கப்பூரிலும் உள்ள பௌத்த சமயத்தினர் முதல் முறையாக மெய்நிகர் விசாக தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக வழக்கமான விசாக தினத்தில் பௌத்த சமயத்தினர் பௌத்த கோயில்களுக்குச் சென்று மூன்று காலடிக்கு ஒரு முறை விழுந்து வணங்குதல், புத்தர் சிலையில் நீரூற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
நோய் முறியடிப்பு காலம் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், கோயில்களில் வழக்கமான விசாக தின நடவடிக்கைகள் நடைபெற இயலாமல் போய்விட்டன.
நேற்று சில கோயில்களும் பௌத்த அமைப்புகளும் காலை பூஜை, தியானம், சொற்பொழிவு என விசாக தின நடவடிக்கைகளைத் தொடங்கின.
‘புத்திஸ்ட் ஃபெலோஷிப்’ அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடத்திய மெய்நிகர் விசாக தினக் கொண்டாட்டங்களில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்துகொண்டு பௌத்த சமயத்தினர் அனைவருக்கும் தமது விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
“கருணை, புரிந்துணர்வு, மீள்திறன் போன்ற முக்கிய பண்புநெறிகள் புத்தரின் போதனைகளில் அடங்கியுள்ளன. இவை கொரோனா கிருமித்தொற்று காலத்தைக் கடக்கக்கூடிய மனத்திடத்தை நமக்கு அளிக்கின்றன.
“எந்த நெருக்கடிக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதைக் குறிக்கும் இதுவும் கடந்துபோகும் எனும் புத்தரின் பொன்மொழி நமக்கு தெம்பளிக்கிறது.
நெருக்கடி காலத்தின்போது சமூகத்தில் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்போக்கைச் சுட்டிய அமைச்சர், “தன்னலமற்ற, கருணைமிக்க இந்த நற்செயல்கள் நம்மை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை அளிக்கின்றன,” என்றும் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதைத் தவிர சிங்கப்பூர் பௌத்த மடாலயம் நேற்று அனைத்துலக இசை நிகழ்ச்சியையும் நடத்தியது. அதில் சிங்கப்பூர் மற்றும் அனைத்துலக கலைஞர்கள் பங்கேற்றனர்.
பகல் உணவுக்குப் பிறகு, 36 குடும்பங்கள், ‘ஸூம்’ இணையத் தளம் வழி பிரிந்திருக்கும் உருவப் படங்களை ஒன்று சேர்க்கும் போட்டியில் பங்கேற்றன. அந்தக் குடும்பங்களுக்கு மடாலயம் முன்கூட்டியே அந்த உருவப் படங்களை இணையம் வழி அனுப்பி வைத்துவிட்டது.
மாலை 4 மணிக்கு பத்து பேர் கொண்ட ஒரு குழு தங்கள் வாழ்வில் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அவர்கள் அனைவரும் தங்களை பௌத்த சமயத்துடன் இணைத்துக்கொள்ளும் அடைக்கலச் சடங்கில் பங்கேற்றனர்.
இப்படி பல்வேறு வழிகளில் பௌத்த சமயத்தினர் மெய்நிகர் நடவடிக்கைகளில் நேற்று பங்கேற்று விசாக தினக் கொண்டாட்டங்களில் அங்கம் வகித்தனர்.