ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் ஆட்டம் போட்டு வரும் கொரோனா கிருமியின் கொடூரப் பார்வை பிரேசில் மீது விழுந்துள்ளது. அந்நாட்டில் 330,890 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் உலகில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் அதிகமானோர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வெள்ளிக் கிழமை மட்டும் ஒரு நாள் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியது.
கொரோனா வுக்கு மொத்தம் 21,048 பேர் பலியாகிவிட்டனர் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சாவ் பாலோ நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இறந்தவர்களை புதைப்பதற்காக வரிசையாக பள்ளங்கள் தோண்டி வைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை, அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க தவறிவிட்டதாக பிரேசில் அதிபரை எதிர்க் கட்சியினர் குறைகூறியுள்ளனர்.
இதனால் அதிபருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது செல்வாக்கும் குறைந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை பிரேசிலில் கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதால் அது பிரிட்டனையும் மிஞ்சியது.
தற்போது ரஷ்யாவின் கிருமித் தொற்று எண்ணிக்கையையும் தாண்டிவிட்டது.
அடுத்ததாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் அமெரிக்காவைத் தொட்டு விடும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 1.5 மில்லியன் பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே உலகின் கிருமிப் பரவல் மையமாக தென் அமெரிக்கா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
தென் அமெரிக்காவின் பல நாடுகளில் கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது என்று செய்தியாளர் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் அவசரகால சேவை இயக்குநர் மைக் ரயான் தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மலேரியா வுக்கான hrdroxy chloroquine’ மருந்தை எடுத்துக் கொள்வதாகக் கூறி ஆச்சரியத்தைக் கிளப்பினார்
ஆனால் அந்த மருந்தினால் கொரோனா கிருமித் தொற்றை குணப்படுத்த முடியாது என்று அெமரிக்காவின் மருத்துவதுறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
திரு ரயானும் அந்த மருந்து கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன் படுத்த முடியாது என்று கூறி உள்ளார்.