சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 88 விழுக்காட்டினருக்கு அதற்கான அறிகுறிகள் அறவே தென்படவில்லை என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்றார்.
“தமிழகத்தில் இதுவரை ‘கொவிட்-19’ நோயில் இருந்து 8,731 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 118ஆக அதிகரித்துள்ளது.
“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா கிருமித்தொற்றை கண்டறிய அதிகபட்ச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் ஒட்டுமொத்த பாதிப்பில் வெறும் 12 விழுக்காட்டினருக்கு மட்டுமே நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன,” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இது மருத்துவ நிபுணர்களுக்கு கவலை அளித்துள்ளது.
எந்த வயதினருக்கு, என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட்டன, எத்தனை பேருக்கு அவ்வாறு இருந்தது என்பது குறித்தும் அமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
தமிழகத்தில்தான் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை உயிரிழந்தவர்களில் ஆண்கள் 81 பேர் என்றும் பெண்கள் 37 பேர் என்றும் தெரிவித்தார். மேலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரில் வயதானோர், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய் பாதிப்புள்ள 84 விழுக்காட்டினர் தான் உயிரிழப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார்.