அடுத்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் நீதிமன்றங்களில் பெரும்பாலான வழக்கு விசாரணைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருப்பதால் அத்தியாவசிய, அவசர விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் மட்டுமே தற்போது நடைபெறுகின்றன.
பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அடுத்த மாதத்தில் இடைவேளை இருக்காது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் நேற்று தெரிவித்தார். அதே போல அரசு நீதிமன்றங்களிலும் குடும்ப நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் அடுத்த மாதத்திலிருந்து தொடரும் என்றார் அவர். புதிய எஸ்ஜியுனைடெட் சமரசத் திட்டத்தின்கீழ் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சில வாதிகளுக்கும் பிரதிவாதிகளுக்கும் மட்டுமே இலவச சமரச சேவையைப் பெறும் தெரிவு வழங்கப்படும்.
இந்தச் சலுகையைப் பெற பொருத்தமானவர்களை உச்ச நீதிமன்றம் அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான வழக்குகளை சிங்கப்பூர் சமரச நிலையத்துக்கு அனுப்பிவைக்கும்.
இந்த சமரச சேவைக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர் அடுத்த மாதம் தொடர்புகொள்ளப்படுவர். ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சிங்கப்பூர் சமரச நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.