ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுகாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள படம் ‘ஓ அந்த நாட்கள்’.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகிறது. ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.
80 விழுக்காடு படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. படத்தின் கதை, வசனங்களை எழுதி இசையமைப்பதும் ஜேம்ஸ் வசந்தன்தான்.
இது காதலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகிறதாம்.
“ராதிகா சரத்குமார், சுகாசினி, குஷ்பு, ஊர்வசி ஆகிய நால்வருமே கடந்த 1980களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகிகளாக திகழ்ந்தவர்கள்.
“இவர்கள் நடித்த நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்புலமாக வைத்து இப்படத்துக்கான கதையை உருவாக்கி உள்ளோம்.
“இந்த நால்வரது தற்போதைய வாழ்க்கையையும் அடித்தளமாக வைத்து முற்றிலும் வித்தியாசமான, குடும்பப் பாங்கான படத்தை உருவாக்குகிறோம்.
“இதற்கேற்ப சுவாரசியமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் மனம் ஒன்றி ரசிக்க முடியும்,” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இப்படத்தின் பெரும்பாலான பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டதால் வெளியீடு காண கிட்டத்தட்ட தயார்நிலையில் உள்ளதாம்.
எனவே ஊரடங்கு முடிந்த கையோடு இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்க்கலாம் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.