‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பைத் திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே முடித்துவிட்டதாகச் சொல்கிறார் அதன் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.ஜே. பாலாஜி.
தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக யாருமே அம்மன் படம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டுபவர், தான் நினைத்ததைவிட ‘மூக்குத்தி அம்மன்’ சிறப்பாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்.
நயன்தாரா அம்மன் அவதாரம் எடுக்கும் முதல் படம் இது. அவருடன் மோதும் வில்லனாக அஜய் கோஷ் நடித்துள்ளார். அம்மன் படத்தில் இடம்பெறும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அதை அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளாராம் அஜய் கோஷ்.
கடந்த 40, 50 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் தயாராகும் அம்மன் படங்களில் நிச்சயம் பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் ஒலிக்கும். இந்தப் படத்திலும் அவர் பாடியுள்ளாராம். அம்மன் புண்ணியத்தில் படம் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இப்படத்தின் கதையை முதன்முறையாக கேட்டபோதே நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். உடனடியாக ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.
“சாமி படம் எடுக்கப்போகிறோம். எனவே எல்லாம் சுத்தபத்தமாக இருக்கவேண்டும். அனைவரும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவரே முன்வந்து சொன்னாராம்.
“படக்குழுவில் இருந்த மற்றவர்களும் இதே மனநிலையில்தான் இருந்தோம். அதனால் நயன்தாராவின் நிபந்தனை அனைவருக்கும் பிடித்திருந்தது.
“நயன்தாராவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால் இறுதிவரை அர்ப்பணிப்புடன் இருப்பார். அவரது ஈடுபாட்டைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அதே மனநிலை வந்துவிடும்.
“பொதுவாக காலையில் படப்பிடிப்புக்கு வந்தார் என்றால் முதல் காட்சி படமாக்கப்படும் வரை பசியாறக்கூட மாட்டார். அதுதான் அவரது வழக்கம். இந்தப் படத்துக்காக இன்னும் ஒருபடி மேலே சென்று படம் முடியும்வரை சைவமாக மாறிவிட்டார்,” என்று நயன்தாரா புகழ் பாடுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
நாகர்கோவிலில் பெற்றோர், தாத்தா, மூன்று தங்கைகளுடன் குடும்பத்தின் மூத்த மகனாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இளைஞன்தான் இப்படத்தின் கதாநாயகன். அந்தக் குடும்பத்தில் திடீரென்று அம்மன் வந்து இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதையாம்.
“அந்த கஷ்டப்படும் இளைஞன் நான்தான். படப்பிடிப்பு துவங்கும் முன்பு கன்னியாகுமரியில் உள்ள அத்தனை கோயில்களுக்கும் சென்று சாமி கும்பிட்ட பிறகுதான் திருப்தி அடைந்தோம்.
“இதில் ஆச்சரியம் என்னவென்றால் படக்குழுவில் உள்ள 200 பேருமே பக்தி சிரத்தையுடன் இருந்தனர். மே 1ஆம் தேதி படத்தை வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தோம்.ஆனால் தற்போதைய நிகழ்வுகள் அனைத்துமே நம் வாழ்க்கையோடும் வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்ட பெரும் போராட்டம்.
“எனவே, இந்த உலகம் எப்போது பாதுகாப்பானதாக மாறுகிறதோ, மக்கள் எப்போது பயமின்றி குடும்பத்துடன் திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போதுதான் ‘மூக்குத்தி அம்மன்’ வெளியாகும்,” என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
‘மூக்குத்தி அம்மன்’ முதல் தோற்ற சுவரொட்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அதுகுறித்தெல்லாம் இவர் அலட்டிக்கொள்வதே இல்லையாம். அனைவரையும் திருப்திபடுத்துவது சாத்தியமில்லை என்கிறார்.