சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பொதுவான அறிவிப்புகள் இருக்கின்றனவே தவிர, அவை குறித்த விவரங்கள் இல்லை என்றும் மாறாக, அவை மக்களின் கற்பனைக்கு விடப்பட்டு உள்ளன என்றும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி (மசெக) அணியின் தலைவர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
வெஸ்ட் கோஸ்ட்டில் நேற்று முன்தினம் தொகுதி உலா சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், “ஒன்றைப் பெறுவதற்காக மற்றொன்றை விட்டுக்கொடுக்க வேண்டும்,” என்று வாக்கியம் இடம்பெற்றுள்ளதை திரு ஈஸ்வரன் சுட்டினார்.
“எதிர்க்கட்சியினர், தாங்கள் எதைப் பெற வேண்டுமோ அதை மட்டும்தான் பேசுகின்றனர். ஆனால், அதைப் பெறுவதற்கு எதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள்,” என்று அவர் விவரித்தார்.
வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெக அணியை எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் அணி போட்டியிடுகிறது. இந்த அணிக்கு டாக்டர் டான் செங் போக் தலைமை வகிக்கிறார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து திரு ஈஸ்வரனின் கருத்துக்குப் பதிலளித்த டாக்டர் டான், தேர்தல் அறிக்கையை மதிப்பிடுவது சிங்கப்பூரர்களைப் பொறுத்தது என்று கூறினார்.
பைனியர் தனித் தொகுதியில் வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் டாக்டர் டான் வீடு வீடாகச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
“தேர்தல் அறிக்கை என்பது நீங்கள் படித்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. அதில் குறிப்பிட்ட அம்சங்கள் குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கக்கூடும். இருந்தாலும் மிகவும் பரந்த அளவிலான கண்ணோட்டத்துடன் அறிக்கை இருக்கிறது.
“தேர்தல் அறிக்கைக்குப் பொருள்கொள்வது மக்களைப் பொறுத்தது. சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எங்கள் அறிக்கை உருவாக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆகையால் இது அவர்களைப் பொறுத்தது.
“நாங்கள் சரியில்லாத தேர்தல் அறிக்கையை தயாரித்து இருப்பதாக அவர்கள் நினைத்தால் அவர்கள் சொல்லட்டும்,” என்று டாக்டர் டான் விவரித்தார்.