கடந்த சில மாதங்களில் எல்லோரையும் விட பெரியது எது என்பதை இயற்கை தெளிவாக நடத்திக் காட்டி விட்டது என்கிறார் இயக்குநர் ரமணா.
இது அனைவருக்கும் நல்லதொரு பாடம் என்றும் கூறுகிறார்.
விஜய் நடிப்பில் ‘திருமலை’, ‘ஆதி’, தனுஷ் நடிப்பில் ‘சுள்ளான்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமணா சில ஆண்டுகளுக்கு முன்னர் கடும் புற்றுநோயால் தாக்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போராடி அதிலிருந்து மீண்டவர்.
மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்பட, பின்பற்றப்பட வேண்டியவை. இந்தக் கொரோனா ஊரடங்கின் மூலம் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கடந்து வேறு யாரும் பெரிய ஆள் இல்லை எனத் தெரிந்து விட்டது என்கிறார் ரமணா.
“புற்றுநோயுடன் போராடியபோது 35 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல், வெயில் கூடப் படாமல் இருந்த காலம் அது.
“மரணத்தின் அசல் முகத்தை எட்டிப் பார்த்த தருணங்கள் அவை. அப்போது பாதிக்கப்பட்டது நான்தான். உயிர் பிழைப்பேனா என்பது கூட எனக்கான சுயநலம்தான். ஆனால் இப்போது பாதிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த உலகம்.
“மன்னரோ, அதிபரோ யாவரும் இதில் அடக்கம். கிரீடம் வைத்தவரும் நடந்து போகிறவரும் செருப்பு இல்லாதவரும் ஒன்றுதான். இவர்கள் யாரையும் கிருமிக்கு வித்தியாசப்படுத்தத் தெரியவில்லை,” என்று யதார்த்தத்தை விவரிக்கிறார் ரமணா.
இருப்பதை வைத்துக் கொண்டு வாழ்வதே சிறப்பு என்பதை இந்த ஊரடங்கு காலம் உணர்த்தி உள்ளதாகக் குறிப்பிடுபவர், ஊரோடு ஒத்துவாழ் என்ற பழைய அறிவுறுத்தல் இப்போது உண்மையாகி இருக்கிறது என்கிறார்.
“உண்மையில் நாம் வாழ்வதற்கான செலவு குறைவுதான். அடுத்தவர் மாதிரி வாழ்வதற்கான செலவுதான் அதிகம் எனப் புரிந்துவிட்டது. நம் குழந்தைகள் இந்த ஊரடங்கு நாட்களில் வாழ்வியல் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
“தலையில் தூக்கி வைத்து செல்லம் கொடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு நடப்பு புரிந்திருக்கிறது. மனிதத்தன்மை வெளிவருகிறது. ராவணனிடம் மறைந்திருந்த வீணை வித்வான் மாதிரி, அவனில் அமைந்திருந்த சிறந்த அரசனுக்குரிய குணம் மாதிரி... நல்ல அம்சங்கள் வெளிப்பட்டன.
“ஆண்கள் 50 நாட்களுக்கு மேல் பெண்களின் தாலியறுத்து குடிக்காமல் இருந்தார்கள். இனிமேல் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும்,” என்கிறார் ரமணா.
இது இயற்கை அனைவரையும் சமத்துவப்படுத்தி விட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிற நேரம் என்று குறிப்பிடுபவர், அனைவரும் எளிமையை நோக்கி நகர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.