இந்த முறை மூன்று கட்சிகள் போட்டியிட்ட ஒரே குழுத்தொகுதியான பாசிர் ரிஸ்-பொங்கோலில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையிலான மக்கள் செயல் கட்சி 64.15% வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
ஐந்து உறுப்பினர் குழுத்தொகுதியான பாசிர் ரிஸ்-பொங்கோலில் களமிறக்கப்பட்ட மசெக அணியில் திரு டியோவும் போக்குவரத்து, தொடர்பு, தகவலுக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் மட்டுமே அனுபவமிக்கவர்கள். டெஸ்மண்ட் லீ கோக் மிங், இயோ வான் லிங், ஷராயெல் தாஹா என மற்ற மூன்று மசெக வேட்பாளர்களும் தேர்தல் களத்திற்குப் புதியவர்கள்.
கடந்த முறை சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி மட்டுமே அந்தக் குழுத்தொகுதியில் மசெகவை எதிர்த்து நின்ற நிலையில், இந்த முறை மக்கள் குரல் கட்சியும் அங்கு களமிறங்கியது.
ஆனால், மக்கள் குரல் கட்சி வைப்புத்தொகையை இழந்துவிட்டது. வைப்புத்தொகையைத் திரும்பப் பெற 12.5% வாக்குகள் தேவை என்ற நிலையில் அந்தக் கட்சிக்கு 12.18% வாக்குகளே கிடைத்தன.
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 23.67% வாக்குகளைப் பெற்றது.
தங்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும் நன்றி கூறிக்கொண்ட டாக்டர் ஜனில், மக்கள் சேவையைத் தொடர்ந்து, பாசிர் ரிஸ்-பொங்கோலை சிறந்த இல்லமாக உருவாக்குவோம் என்று தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளார். சமூகத்திற்குத் தொண்டாற்ற மசெக ஆர்வலர்களின் பங்காளித்துவம் தொடரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.