போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவருடைய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாம் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று உள்கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ, ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கண்காணிப்புக்காக தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கும் வாயப்பு இல்லை. அநேகமாக டெங்கியாக இருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார். தன்னுடைய வட்டாரம் டெங்கி அதிகம் உள்ள பகுதி என்பதை அவர் சுட்டினார்.
அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது இன்று உறுதியானது. திரு கோவுக்கு 1980களில் முதல் தடவையாக டெங்கிக்காய்ச்சல் ஏற்பட்டதாக தெரியவருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
திரு கோவுக்கு இந்த ஆண்டில் வயது 68 ஆகிறது. அவர் இயோ சூ காங் பகுதியில் வசிக்கிறார். அந்தப் பகுதியில் டெங்கிக் காய்ச்சல் அதிகம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் பட்டியலிட்டு இருக்கிறது.
இப்போது திரு கோ சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.