சென்னை: கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசு தூதரகத்துக்கு உணவுப் பொருள் என்ற பெயரில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் வழியாக கடந்த சில மாதங்களில் 400 கிலோ தங்கக் கடத்தல் முயற்சி நடந்து இருப்பதால் அதிகாரிகள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேசிய வேவுத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சென்னை வந்து விமான நிலைய அதிகாரிகள் உட்பட பலரிடத்திலும் புலன் விசாரணை நடத்தியது.
கேரளாவில் இருந்து வந்த அந்தக் குழு, பல விவரங்களுடன் திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. தங்கக் கடத்தல் சம்பவங்களில் விமான நிலையம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பதால் சந்தேகத்திற்குரிய அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் வழியாக நடந்த தங்கக் கடத்தல் விவகாரங்கள் தொடர்பான பத்திரங்களை ஒரு குழுவினர் சென்னையிலேயே தங்கி திரட்டி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சூளைமேட்டில் கடந்த 2019 ஜனவரி மாதம் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், 24 கிலோ தங்கத்துடன் வந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு தென்கொரிய பெண்கள் கைதான விவகாரம் ஆகியவை பற்றியும் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவிற்கு தங்கம் கடத்தி வரப்பட்டதன் தொடர்பில் இப்போது தேசிய வேவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை இப்போது வேகமெடுத்து இருக்கிறது.