யோகா வகுப்பிலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் பயிற்சி பெற்றபோது தங்கள் பயிற்றுவிப்பாளர்கள் தங்களைத் தகாத முறையில் தொட்டதாக இரு பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று யோகா வகுப்பின்போது தமது பயிற்றுவிப்பாளர் தம்மை இருமுறை மானபங்கம் செய்ததாக டிரஸ்ட் யோகாவின் முன்னாள் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக ஊடத்தில் பதிவிட்டார்.
போலிசாரிடம் புகார் செய்துள்ளதாகவும் சட்ட ரீதியான ஆலோ
சனை பெற்றுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளர் விடுப்பில் இருப்பதாகவும் மானபங்கம் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டிரஸ்ட் யோகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரஸ்ட் யோகா நிறுவனம் தெலுக் ஆயரிலும் தெம்பனிஸிலும் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆனால் நடந்ததாகக் கூறப்படும் இந்த மானபங்கச் சம்பவம் எவ்விடத்தில் நிகழ்ந்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. போலிசார் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக டிரஸ்ட் யோகா நிறுவனம் கூறியது.
“யோகா வகுப்பு எனக்குப் பாதுகாப்பான இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட அத்துமீறல் நிகழ்ந்திருப்பது எனக்கு நடந்த மிகப் பெரிய துரோகமாகக் கருதுகிறேன்,” என்று மானபங்கம் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
மற்றொரு சம்பவத்தில் டோபி காட் வட்டாரத்தில் உள்ள அபியேரோ ஃபெர்ஃபார்மன்ஸ் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்றுவிப்பாளர் தம்மை மானபங்கம் செய்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்தப் பயிற்சியாளர் இனி தமது உடற்பயிற்சிக்கூடத்துக்குள் நுழைய முடியாது என்று அதன் நிறுவனர் திரு ஹபிப் நூர் கூறியுள்ளார்.
அந்தப் பயிற்றுவிப்பாளர் மானபங்கம் செய்தது குறித்து மற்றொரு பயிற்றுவிப்பாளர் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது.
அபியேரோ உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்யும் பெண்ணை ஆண் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தொடர்ந்து பலமுறை தகாத முறையில் தொடுவதைக் காட்டும் காணொளியை உடற்பயிற்சிக்கூடப் பயிற்றுவிப்பாளர் ஷெரில் லோ கடந்த திங்கட்கிழமையன்று தமது இன்ஸ்டமகிராமில் பதிவேற்றம் செய்தார். தம்மைத் தொட வேண்டாம் என்று அப்பெண் கூறியும் அந்தப் பயிற்றுவிப்பாளர் அவரைத் தொடர்ந்து பலமுறை தொட்டதாக அவர் கூறினார்.