மரினா பே மிதக்கும் மேடைக்குப் பதிலாக கட்டப்பட இருக்கும் புதிய ‘என்எஸ்’ சதுக்கம் புது நகர்ப் பகுதியின் ஒருமித்த கவனத்தையும் ஈர்க்கும் மையமாகத் திகழும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.அந்தச் சதுக்கம், 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்படும். அங்கு வருங்காலத்தில் தேசிய தின அணிவகுப்புகள் நடக்கும். தேசிய சேவையாளர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட கலைக்கூடமாகவும் அது திகழும் என்று தேசிய தினச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய சதுக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வடிவமைப்பை திரு லீ நேற்று வெளியிட்டார். கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டம் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு பகுதிகளாக இரு இடங்களில் நடந்தது.
அணிவகுப்பு பாடாங்கில் காலையில் நடந்தது. அணிவகுப்பு தொடங்கியதற்கு முன்னதாக பிரதமரின் தேசிய தினச் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. புதிய சதுக்கம், பெரிய அளவிலான தேசிய நிகழ்ச்சிகளுக்கு உரிய நிரந்தர இடமாக இருக்கும்.
அங்கு 35,000 பார்வையாளர்களுக்கு இருக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது. இப்போதைய மிதக்கும் மேடையில் 27,000 பேருக்கு மட்டுமே இடம் உள்ளது.
உருவாக்கப்படும் சதுக்கத்தில் நீச்சல் குளம், நீர் விளையாட்டு மையம் போன்ற சமூக விளையாட்டு வசதிகளும் இருக்கும். நீர்முகப்பு உலாச்சாலை ஒன்றும் அமையும். அது அந்தப் பகுதியில் நடையர்களுக்கான இணைப்பு வசதிகளை அதிகப்படுத்தும். மரினா பேயைச் சுற்றி அமையும் பாதையாகவும் அது இருக்கும்.
“புதிய சதுக்கம் ஒளிவிடும் ஒரு சிவப்புப் புள்ளியாகத் திகழும். புதிய நகரின் ஒருமித்த கவனத்தையும் அது ஈரக்கும்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
சதுக்கத்தில் அமையும் கலைக்கூடம், கடந்த கால, நிகழ்கால தேசிய சேவையாளர்களின் தொண்டுகளைப் பெருமைப்படுத்தும். புதிய சதுக்கம் ஒவ்வொருவருக்கும் உரிய சமூக இடமாகத் திகழும் என்றார் பிரதமர்.
‘வோஹா ஆர்க்கிடெக்ட்ஸ்’ நிறுவனத்தைத் தலைமையாகக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றுக்கு என்எஸ் சதுக்கத் திட்டம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சும் தற்காப்பு அமைச்சும் கூட்டாக தெரிவித்தன.
இதற்கான வடிவமைப்பு ஏலக்குத்தகை சென்ற ஆண்டு மே மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. அந்த நடவடிக்கையின் மூலம் வோஹா ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனம் பிரதான ஆலோசனை நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தச் சதுக்கத்தின் பணிகள் 2022 மார்ச்சில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளன. இருந்தாலும் கொவிட்-19 சூழ்நிலை காரணமாக இந்தத் திட்டங்களில் மாற்றம் ஏற்படக்கூடும். இப்போது நடப்பில் உள்ள மரினா பே மிதக்கும் மேடையில் 2007 முதல் மொத்தம் ஒன்பது தடவை தேசிய தின அணிவகுப்பு நடந்துள்ளது. ஆகக் கடைசியாக அங்கு அணிவகுப்பு 2018ல் நடந்தது.