கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போரில், உணவு உண்ணும் இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நிலைமை தேறியதாக தெரியவில்லை.
உணவங்காடி நிலையங்களுக்குச் செல்வோரில் சிலர், சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் சுத்தப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வந்தாலும், பலர் அந்த வேலையைச் சுத்தப்படுத்தும் பணியாளர்களிடமே விட்டுவிடுகிறார்கள்.
நாடு முழுவதும், குறிப்பாகச் சமூக உணவு உண்ணும் இடங்களில், சுகாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக ‘எஸ்ஜி கிளீன்’ இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கொவிட்-19 கொள்ளை நோய்க்கு எதிரான போராட்டம் தொடர்புடையதானது இந்த இயக்கம்.
இதையடுத்து, பயன்படுத்தப்பட்ட மெல்லிழைத் தாட்களைத் தங்களின் உணவுத் தட்டுகளில் வைக்க வேண்டாம் என்று அப்போதைய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கேட்டுக்கொண்டிருந்தார்.
மக்கள் விட்டுச்செல்லும் சிறு சிறு அபாயங்கள் அவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ‘எஸ்ஜி கிளீன்’ தூதர்கள் நியமிக்கப்பட்டனர். கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, தனிநபர் சுகாதாரத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வலியுறுத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர்.
வெவ்வேறு முயற்சிகள் இவ்வாறு எடுக்கப்பட்டும், உணவு உண்போர் பலர் சுத்தப்படுத்தும் பணியை அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களிடமே விட்டுவிடுவதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று முன்தினம் கண்டறிந்தது.
சராசரியாக பத்தில் எட்டு பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‘எஸ்ஜி கிளீன்’ வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் தெரிய வந்தது.
சாப்பிட்டு முடித்ததும் தட்டுகளை அப்படியே மேசைமேல் விட்டுச் சென்றனர்; பயன்படுத்திய மெல்லிழைத் தாட்களைத் தட்டுகளில் போட்டனர்; சில சமயங்களில் அந்த மெல்லிழைத் தாட்கள் மேசை நாற்காலி மீதும் வீசப்பட்டிருந்தன.
இதனால், அவ்விடங்களைச் சுத்தப்படுத்தும் பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது.
உணவு மேசையையும் தட்டுகளையும் துடைக்க உதவும் வாடிக்கையாளர்கள் சிலர் இருந்தாலும் சுத்தம் செய்வது பணியாளர்களின் வேலை என்று காரணம் சொல்வோர் இருக்கவே செய்கின்றனர்.