சென்னை: மூளைத் தண்டுச் சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகளைத் தானம் அளித்து எட்டு பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
எனவே, மக்கள் அனைவரும் உடல் உறுப்பு தானத்தின் மகத்துவத்தை உணர்ந்து, அதன்படி உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
“இந்த ஒப்பற்ற தானத்தின் மூலம் இறந்தபிறகும் நாம் உயிர் வாழலாம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13ஆம் தேதி அனைத்துலக உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
நேற்றைய இந்த தினத்தில் முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணை யம் என்ற அமைப்பை அம்மா ஜெயலலிதா உருவாக்கினார்.
“அந்த அமைப்பின் பலனாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநில மாக தமிழகம் விளங்கி வருகிறது.
“தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8,163 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உள்ளன.
“உடல் உறுப்பு தானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளையும் பெற்றுள்ளது.
“அரசு, தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஏழை-எளிய மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
“உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்,” என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
“உடல் உறுப்புகளைத் தானம் செய்வோம், இறந்த பின்பும் உயிர் வாழ்வோம்,” என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.