நாட்டின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக், தனது இந்திய ஊழியர்களைக் குறிவைக்கும் சமூக ஊடகப் பதிவுகளை வெறுப்புணர்வையும் சகிப்பின்மையையும் தூண்டக்கூடிய “பிளவுபடுத்தும் இனவாத இயக்கம்,” என்று சாடியுள்ளது.
“வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, இனவாதம், வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சு ஆகியவற்றுக்கு இடமளிக்காத சிங்கப்பூரில் இந்த நடவடிக்கைகள் வேரூன்றத் தொடங்கியுள்ளன,” என்று நிறுவனம் கூறியது.
“இத்தகைய போலியான தகவல்கள், எங்களுக்குக் கடுங்கோபத்தை அளிக்கின்றன. உள்ளூர்ச் சமூக ஊடகங்களில் காணப்படும் இத்தகைய வெறுப்புணர்வுமிக்க நடத்தை, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சிங்கப்பூரர்களுக்கு அவமானத்தை அளிக்கிறது.
“அவர்கள் மேல் எந்த ஒரு தவறும் இல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டுள்ள எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம்,” என்று நிறுவனம் தெரிவித்தது.
ஒருசில தெமாசெக் ஊழியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களைக் காட்டும் ‘லிங்ட்இன்’ பக்கங்கள், சமூக ஊடகத்தளங்களில் அண்மைய நாட்களாக வலம் வருகின்றன. உயர் பதவியில் இருக்கும் அந்த ஊழியர்களின் வேலை ஏன் சிங்கப்பூரர்களால் நிரப்பப்படாமல் வெளிநாட்டவரால் நிரப்பப்பட்டுள்ளது என்ற கேள்வி அப்பதிவுகளில் கேட்கப்பட்டுள்ளது.
இதேபோல் ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’, டிபிஎஸ்’ வங்கி ஊழியர்களும் சில பதிவுகளில் குறி வைக்கப்பட்டுள்ளனர்.
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு தொடர்பான ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமூக வழிகாட்டிகளை இந்தப் பதிவுகள் நிச்சயமாக மீறியுள்ளன. இதன் பொருட்டு தெமாசெக் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது.
இதுபோன்ற வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு வெளிப்படும்போதெல்லாம் அதைக் களைந்தெறிவதில் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நெருக்குதலை அளிப்போம் என்றும் தெமாசெக் தெரிவித்தது.
தகுதிநிலை, உன்னதம், நேர்மை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் தனது ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெமாசெக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
“சிங்கப்பூரிலுள்ள எங்களது தளத்திலுள்ள கிட்டத்தட்ட 600 ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள். நிர்வாக இயக்குநர்களிலும் அந்தப் பதவிக்கு மேலான பொறுப்புகளில் இருப்பவர்களிலும் கிட்டத்தட்ட அதே விழுக்காடு சிங்கப்பூரர் உள்ளனர்,” என்று அது தெரிவித்தது.
அனைத்துலக அளவில் தெமாசெக் நிறுவனத்தின் ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்றும் 40 விழுக்காட்டினர் பிற நாட்டுக் குடிமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 10 விழுக்காட்டினர் நிரந்தரவாசிகள் என்றது அந்நிறுவனம்.
வெளிநாட்டு பணியாளர்களில் 9 விழுக்காடு சீனர்கள், 7 விழுக்காடு அமெரிக்கர்கள், 6 விழுக்காடு இந்தியர்கள், 3 விழுக்காடு பிரிட்டிஷ்காரர்கள், 3 விழுக்காடு மலேசியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.