கோலாலம்பூர்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் மூவரை யும் உள்ளூர்வாசி ஒருவரையும் மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். சென்ற மாதம் 2ஆம் தேதிக்கும் இம்மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் புக்கிட் அமான் சிறப்புப் படை போலிசார் அந்த நால்வரையும் கைது செய்ததாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். கைதான மூன்று வெளிநாட்டவர்களும் அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப் பட்டனர்.
புக்கிட் பிந்தாங்கில் உணவகம் நடத்தி வந்த 37 வயது பங்ளாதேஷியரை கடந்த மாதம் 19ஆம் தேதி போலிசார் கைது செய்தனர். அனைத்துலக பயங்கரவாதக் குழு ஒன்றுக்கு அவர் ஆயுதங்களைக் கடத்திய தாகச் சந்தேகிக்கப்பட்டது. அவரைக் கைது செய்ய அனைத்துலக போலிஸ் 'சிவப்பு அறிக்கை' விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இம்மாதம் 2ஆம் தேதி பங்ளாதேஷிற்கு நாடு கடத்தப் பட்டார். இரண்டாவது சந்தேக நபரான 38 வயது நேப்பாளத் தொழிலதிபரும் சென்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கடந்த 2ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார். "கேளிக்கைக் கூடங்களையும் ஒரு ஹோட்டலையும் அவர் நடத்தி வந்தார். பயங்கரவாதிகள் பயணம் செய்ய ஏதுவாக போலி ஆவணங் களை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார் என்று நம்புகிறோம்," என்று திரு காலிட் கூறினார்.