ஒரு வயது ஆண் குழந்தையைக் காதலன் சித்திரவதை செய்ய அனுமதித்ததாகச் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச் சாட்டுகளை 25 வயது பெண் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். ஒரு சம்பவத்தில், கட்டிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட குழந்தையின் மண்டையோடு உடைந்தது. சென்ற ஆண்டு மார்ச் 25ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் குழந்தை யின் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. ஆனால், அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்தது. தற்போது மூன்று வயதாகும் அந்தக் குழந்தை வளர்ப்புப் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கிறது. குழந்தைக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை வாரந்தோறும் பார்க்க தாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகத் தாயின் பெயர் வெளியிடப்படவில்லை.
பகுதிநேர விற்பனை உதவியாளரான அந்தப் பெண்ணுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். பின்னொரு தேதியில் தீர்ப்பு அளிக்கப்படும். பெண்ணின் வழக்கறிஞர் ஏ.ரவிசங்கர் அக்டோபர் 27ஆம் தேதி குறைவான தண்டனை அளிக்கும்படி மாவட்ட நீதிபதி ஆடம் நகோடாவிடம் தமது வாதத்தை முன்வைப்பார். குழந்தையைத் துன்புறுத்திய 26 வயது ஃபிராங்லி டான் குவான் வெய் என்பவருக்குக் கடந்த திங்கட்கிழமை ஆறரை ஆண்டு சிறையும் ஆறு பிரம்படியும் தண்டனை விதிக்கப்பட்டது. கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் கூறிய ஒரு குற்றச்சாட்டையும், குழந்தையைத் துன்புறுத்தி யதாகக் கூறிய நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்றையும் அவர் ஒப்புக்கொண்டார். குழந்தையின் தாய் குழந்தையின் நலனில் அறவே அக்கறை கொள்ளவில்லை என்றும் டான் செய்த கொடுமைகளைப் பலமுறை கண்டும் காணாமல் இருந்ததாகவும் உதவி வழக்கறிஞர் டில்லன் கொக் நீதிமன்றத்தில் கூறினார்.