கொவிட்-19 நெருக்கடியின் காரணமாக சிங்கப்பூரில் இணையம் மூலமாக பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இந்தப் போக்கால் சிங்கப்பூர் உற்பத்திப் பொருட்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடைகளில் பொருட்கள் வாங்கும் பயனீட்டாளர்கள் $100 செலவிடும்போது $25 வெளிநாட்டுப் பொருட்களில் செலவிடுவது சில்லறை வர்த்தகத்தில் சராசரியாக இருந்து வந்தது. இப்போது இணையம் வழி பொருட்களை வாங்குபவர்கள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுகின்றனர்.
சிங்கப்பூர் சுற்றுலாத்துறை வாரியமும், மின்னிலக்கக் கட்டணத் தொழில்நுட்ப நிறுவனமான ‘விசா’வும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒப்பனைப் பொருட்கள், காலணிகள், உணவு, கேக் போன்ற தயாரிப்புகள் ஆகியவற்றுடன் உள்ளூர் பேரங்காடிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ‘விசா’ நிறுவனத்தின் விசாநெட் மின்னியல் கட்டணக் கட்டமைப்பு மூலம் செலுத்தப்பட்ட தொகைகளும் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன.