கொவிட்-19 கிருமித் தொற்றை முறியடிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் உணவகங்களில் கொவிட்-19 விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்கள் இருக்கவே செய்கின்றனர். கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதன் தொடர்பில் சென்ற வார இறுதியில் அதிகாரிகள் பல உணவு, பானக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து மக்களிடையே பிரபலமாக இருக்கும் புகிஸ், ஆர்ச்சர்ட் ரோடு, தஞ்சோங் பகார் வட்டாரங்களில் அமைந்துள்ள உணவு, பான வர்த்தகங்களில் பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் தங்களின் கண்காணிப்புப் பணிகளை அன்றாடம் மேற்கொண்டு வருவதாக வர்த்தகங்கள் கூறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சுமார் 30 உணவு, பானக் கடைகளைப் பார்வையிடச் சென்றபோது, பெரும்பாலானவற்றில் களை கட்டியிருந்தது. இருப்பினும் ஐந்து நபருக்கு மேல் உள்ள குழுக்களை அனுமதிக்கமுடியாது என்று சில கடைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் வெவ்வேறு மேசைகளில் அமரவேண்டியிருந்ததுடன் மேசைகளும் அருகருகே இல்லாதவாறு அமைந்திருந்தன.