ஆண்டுதோறும் இடம்பெறும் சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக இம்முறை இணையம் வழியாக, சிறிய அளவில் நடத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு 104 உணவு தயாரிப்பாளர்கள் 146 கூடங்களை அமைத்திருந்த நிலையில் இவ்வாண்டு கண்காட்சியில் 52 பேரே பங்கேற்கவுள்ளனர்.அடுத்த மாதம் 5ஆம் தேதியில் இருந்து நவம்பர் 1ஆம் தேதி வரை உணவுக் கண்காட்சி நடைபெறும் என சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் தங்களது வர்த்தகத்தை மின்னிலக்கமயப்படுத்த உதவுவதில் இவ்வாண்டு கண்காட்சி கவனம் செலுத்தும். உணவு தயாரிப்பாளர்கள் தங்களது உணவு வகைகளை இணையம் வழியாக விற்க ஏதுவாக சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் சங்கம், ‘சிங்கப்பூர் ஃபுட் யுனைடெட்’ மின்வணிகத்தளத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வணிகச் சின்னத்திற்கும் குறைந்தபட்சம் $40 செலவிட வேண்டும் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது என்றும் விநியோகக் கட்டணமாக $1.50 வசூலிக்கப்படும் என்றும் சங்கம் தெரிவித்தது. ஃபேஸ்புக் நேரலை அங்கங்களும் பதிவுகளும் இடம்பெறும். 220,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘சிங்கப்பூர் ஹோம் குக்ஸ்’ எனும் இணையக் குழு மூலமாக உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும். 21வது முறையாக நடைபெறும் உணவுக் கண்காட்சியின்போது, புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் இடம்பெறும் வகையில் எட்டு ஃபேஸ்புக் நேரலை அங்கங்களை அக்குழு நடத்தும்.
நேற்று நடந்த கண்காட்சியின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் லோ யென் லிங், ‘லக்சா’ செய்வது எப்படி எனத் தெரிந்துகொண்டார்.
“வர்த்தகங்கள் வெற்றிகரமானதாக உருவெடுக்க புத்தாக்கம், ஒத்துழைப்பு, மின்னிலக்கமயம் ஆகிய மூன்று முக்கிய கூறுகள் தேவை,” என்றார் திருவாட்டி லோ.
“எங்களது பெரும்பாலான உறுப்பினர்கள் இன்னும் தங்களுடைய வாடிக்கையாளர்களுடன் நேரடி ஈடுபாட்டையே கொண்டு உள்ளனர். அவர்கள் இணையவழி விற்பனையில் அடியெடுத்து வைக்க ‘சிங்கப்பூர் ஃபுட் யுனைடெட்’ மின்வணிகத்தளம் உதவும்,” என்று சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டேவிட் டான் கூறினார்.
கடந்த ஆண்டு கண்காட்சி ஏறத்தாழ 450,000 பேரை ஈர்த்தது.