அரசியல் குறித்து சூர்யா நேரடியாக கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் அண்மைக்காலமாக அவர் தெரிவிக்கும் சில கருத்துகள் அரசியல் ஆக்கப்படுவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சூர்யா. இது அவரது அரசியல் பிரவேசத்துக்கான முதல் அடி என்று பேசப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் அக்டோபர் 30ல் வெளியீடு காண உள்ளது.
இதையடுத்து தனது 39வது படமாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’வில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் என்ன காரணத்தாலோ அப்படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இணையம் வழி நேரடியாக படங்களை வெளியிடுவதற்கு ஹரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எனவே இருவரும் இப்போதைக்குக் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘வாடிவாசல்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ஆனால், இப்படத்தை தொடங்குவதற்கு முன்பு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு ஒரு படத்தை இயக்கித் தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் வெற்றிமாறன்.
எனவே, இடைப்பட்ட நேரத்தில் வேறொரு படத்தில் நடித்து முடித்துவிடலாம் என்பதே சூர்யா போட்டுள்ள கணக்கு. இதையடுத்துதான் ‘பசங்க’ பாண்டிராஜ் சொன்ன கதையில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
தமது ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா. அவரது இந்த உண்மையான குணத்தையும் செயல்பாடுகளையும் திரையில் காட்டும் வகையில் கதைக்களத்தை அமைத்துள்ளாராம் பாண்டிராஜ்.
இதுபோன்ற கதையில் சூர்யா இதுவரை நடித்ததில்லை என்பதுடன் ஓர் அரசியல் தலைவராகவும் திரையில் தோன்ற உள்ளாராம். அதுமட்டுமல்ல, மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்துவிட முடியும் என பாண்டிராஜ் உறுதி அளித்துள்ளதாகத் தகவல்.
ஜனவரிக்குள் இப்படத்தை முடித்துவிட்டால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்புக்குத் தயாராகிவிடலாம் என்பதே சூர்யா போட்டுள்ள கணக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இதற்கிடையே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளார். இதில் முதன்முறையாக நீதிபதி கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார்.
ஞானவேல் சொன்ன கதை மிகவும் பிடித்துப்போனதால் சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.
இத்தகைய தகவல்களால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.