சிங்கப்பூர் கடற்பகுதியில் கள்ளத்தனமாக ஊடுருவும் கலன்களை அதிவேகத்தில் விரட்டிப் பிடிக்கும் போலிஸ் கரையோரக் காவற்படையின் நடவடிக்கையின்போது எடுக்கப்படும் திடீர் முடிவில்தான் அந்த முயற்சியில் வெற்றி கிட்டுமா என்பது தெரியவரும். அந்த முயற்சியில் தோல்வி கிட்டினால் அதன் விளைவுகள் பேராபத்தாக முடியும். சிங்கப்பூர் கடற்பகுதியில் ஊடுருவிகள் வெற்றிகரமாக நுழைந்திருப்பார்கள் அல்லது அதைவிட மோசமாக போலிஸ் கரையோரக் காவற்படையின் சொந்த கலன் கவிழ்ந்திருக்கும்.
இப்படிப்பட்ட அதிக ஆபத்தான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட போலிஸ் கரையோரக் காவற்படை தனது அதிகாரிகளுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனது பாவனைப் பயிற்சி மையத்தில் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் பயிற்சிகளை அளித்து வருகிறது.
போலிஸ் கலன்களைத் தந்திரமாகக் கையாளுதல் மற்றும் குறிசுடும் பாவனைப் பயிற்சி முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நான்கு பாவனைப் பயிற்சிகள் உண்டு. அவற்றில் இரண்டு, போலிஸ் கரையோரக் காவற்படையின் கலன்களின் வழக்கமான இடைமறிக்கும் செயல்முறைகளைக் கொண்டிருக்கும்.
மற்ற இரண்டு, போலிஸ் கரையோரக் காவற்படையின் கலன்களின் அதிவேக இடைமறிக்கும் செயல்முறைகளைக் கொண்டிருக்கும். இந்தப் பாவனைப் பயிற்சி முறை உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாவனைப் பயிற்சிகள் மணிக்கு 50 கடல்மைல் வேகத்தில் சமதளமில்லாத வேகத்தில் போலிஸ் கலன்களைப் பிரதிபலிக்கும். 50 கடல்மைல் வேகம் என்றால் அது நிலத்தில் மணிக்கு 92 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஒப்பானதாகும்.
பாவனைப் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி வீரர்கள் கண்காணிப்பு மூக்குக் கண்ணாடிகள் அணிந்து, தங்கள் கலன்களைக் கையாளுதல் மற்றும் குறிசுடும் ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். பயிற்சி வீரர்களின் ஆற்றல்களை அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் தங்கள் சொந்த செயல்பாட்டு நிலையத்திலிருந்து கண்காணிப்பார்கள்.
பயிற்சி வீரர்களின் திறன்களைச் சோதிப்பதற்காக பயிற்று விப்பாளர்கள் வெவ்வேறு காட்சிகளை, கடல் நிலவரங்களை மற்றும் ஒட்டுமொத்த பாவனைப் பயிற்சிச் சுற்றுச்சூழலை ஏற்படுத்துவார்கள்.
போலிஸ் கரையோரக் காவற்படையின் பயிற்சிப் பள்ளியின் தலைவரான சூப்ரின்டென்டண்ட் அகம்மது பாஷா, இந்தப் பயிற்சி முறை பயிற்சி வீரர்களுக்குக் கடுமையான கடல் சார்ந்த பயிற்சிகளை அளிக்கும் என்றார். இந்தப் பயிற்சிகளை நேரடியாக வழங்கும்போது, கலன்கள் அதிவேகத்தில் செல்லுகையில் வீரர்களின் பாதுகாப்புக்குப் பல்வேறு அபாயங்கள் நிகழலாம் என்று திரு பாஷா, கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட பாவனைப் பயிற்சி மையத்தின் விளக்கக் காட்சியின்போது விவரித்தார்.
“கடலில் நேரடிப் பயிற்சிகள் நடக்கும்போது தவறுகளுக்கு இடமில்லை. ஆகவே, பயிற்சி அதிகாரிகள் தங்கள் திறன்களைப் பாவனைப் பயிற்சிக் கூடத்தில் மேம்படுத்திக்கொள்ளலாம். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்,” என்றார் திரு பாஷா.
“நேரடிப் பயிற்சியில் தேவைப்படும் பயிற்றுவிப்பாளர்கள் எண்ணிக்கையைவிட பாவனைப் பயிற்சியில் குறைவாகவே தேவைப் படும். பாவனைப் பயிற்சிக் கூடத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் சரியாக செயல்படுவது எப்படி என்று வீரர்கள் முழுமையாகப் பயிற்சி பெற்றவுடன், அவர்கள் கடலில் நேரடி செயல்முறை பயிற்சிக்குத் தயார் என்று பயிற்றுவிப்பாளர்கள் முடிவு செய்வர்.
“அப்போது அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அது அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும்.” என்றார் திரு பாஷா.