சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 1) அறிவிக்கப்பட்ட 21 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் இருவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்ததையடுத்து, அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று எண்ணிக்கையில் 2 குறைக்கப்பட்டது.
அதில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்.
அவர்களில் நால்வர் மலேசியாவிலிருந்து வந்த கப்பல் ஊழியர்கள். பரிசோதனைக்குப் பிறகு, கப்பலிலிருந்து அவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து வந்த எண்மர், இந்தோனீசியா, பிரான்ஸ், பிலிப்பீன்சிலிருந்து தலா ஒருவர் என எஞ்சிய 11 பேரும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் உள்ளூர் சமூகத்தில் வசிக்கும் நிரந்தரவாசி; எஞ்சிய மூவர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
உள்ளூர் சமூகத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் தினசரி சராசரி கடந்த இரு வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த 2 வாரங்களாக 1ஐ விட குறைந்து நிலையாக உள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 34.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.