கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சர்ச்சையைக் கிளப்புவதை விட்டுவிடவில்லை.
“சாலையில் காத்திருக்கும் சிறந்த தேசப் பற்றாளர்கள் சிலருக்குச் சிறுவியப்பை அளிக்கப் போகிறோம்,” என்று டுவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளிப்பதிவை வெளியிட்ட டிரம்ப், சிறிது நேரத்தில் தாம் சிகிச்சை பெறும் இராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேறி, காரில் உலா சென்றார்.
முகக்கவசம் அணிந்தபடி காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த டிரம்ப், சாலையோரத்தில் இருந்த தம் ஆதரவாளர்களை நோக்கிக் கையசைத்தார். சற்று நேரத்தில் அவர் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார்.
‘மீண்டும் பள்ளிக்குச் சென்றதன் மூலம்’ கொரோனா குறித்து தாம் மேலும் பல விஷயங்களை அறிந்துகொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், டிரம்ப்பின் செயலைச் சுகாதார நிபுணர்கள் பலரும் குறைகூறியுள்ளனர்.
“குண்டு துளைக்க முடியாது என்பதுடன் ரசாயனத் தாக்குதலில் இருந்தும் காக்கும் வகையில் காற்றுக்கூட புக முடியாதபடி அதிபரின் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் காரில் இருந்த மற்றவர்களுக்கு அதிபர் மூலம் கொரோனா தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது,” என்று, டிரம்ப் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற மருத்துவர் கூறினார்.
அவருடன் காரில் பயணம் செய்த ரகசிய சேவை அதிகாரிகள் அனைவரும் இனி 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் டாக்டர் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியினரும் டிரம்ப்பின் செயலைச் சாடியுள்ளனர். “எங்களுக்குத் தலைமைத்துவம் வேண்டும், வெறும் புகைப்படச் செயல்பாடு தேவையில்லை,” என்றார் பிரதிநிதிகள் சபையின் ஜன நாயகக் கட்சி உறுப்பினர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ்.
ஆனால், பாதுகாப்பானது என மருத்துவக் குழுவினர் தெரிவித்த பிறகே டிரம்ப் காரில் உலா சென்றதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜூட் டீரி தெரிவித்தார்.