ஐநா: சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களான உய்கர்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 39 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஹாங்காங்கின் தற்போதைய நிலவரம் குறித்தும் அவை கவலை தெரிவித்துள்ளன.
ஐநாவில் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தை வழி நடத்திய ஜெர்மனுக்கான ஐநா தூதர், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியைப் பார்வையிட தற்சார்பு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால், அதற்குப் பதிலளித்த சீன பிரதிநிதி, ஹாங்காங் நிலவரத்தைக் காரணம் காட்டி யாரும் சீனாவின் உள்நாட்டு விவகாராங்களில் மூக்கை நுழைக்கக்கூடாது என்றார். சீனா உட்பட 55 நாடுகள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் அவர் வாசித்தார்.
ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை ‘கபடமான’ நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டதுடன் அந்த மூன்று நாடுகளும் தங்களது அகந்தை, காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும் என்றும் சாடினார்.
சீனாவின் அச்சுறுத்தல்கள், எதிர்ப்புகளையும் தாண்டி 39 நாடுகள் சீனாவுக்கு எதிராக குரல்கொடுத்ததற்கு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு பாராட்டுகளைத் தெரிவித்தது.