துவாஸ் லிங்க் - துவாஸ் வெஸ்ட் ரோடு நிலையங்களுக்கு இடையே மின்கம்பிவடத்தில் ஏற்பட்ட மின்காப்புப் பிரச்சினையைச் சரிசெய்ய முயன்றபோது அது தொடர் விளைவுகளை ஏற்படுத்திவிட்டதே நேற்று முன்தினம் நிகழ்ந்த ரயில் சேவைத் தடைக்குக் காரணம் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மின்காப்புக் கோளாற்றைத் தனிமைப்படுத்தும் விதமாக துவாஸ் வெஸ்ட் ரோடு நிலையத்தில் உள்ள ஒரு மின்சுற்றுத் தகர்ப்பான் செயல்பட்டிருக்க வேண்டும். அது செயல்படாமல் போனதால் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்தடங்களுக்கான மின்விநியோக அமைப்பு துண்டிக்கப்பட்டது,” என்று எஸ்எம்ஆர்டியின் அறிக்கை கூறியது.
மின்விநியோகத்தைச் சரிசெய்வதற்காக, போன விஸ்தா துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோளாற்றைத் தனிமைப்படுத்தாமல் அவ்வாறு செய்ய முயன்றதால் வட்ட ரயில் பாதைக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
“மின்காப்புக் கோளாற்றை அடையாளம் கண்டு, அதைத் தனிமைப்படுத்தியபின், மின்சுற்றுத் தகர்ப்பானின் பழுதடைந்த பாகம் மாற்றப்பட்டது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்தப் பாகங்கள் முன்னதாகவே பழுதடைவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் அதன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் எஸ்எம்ஆர்டி தெரிவித்துள்ளது. அத்துடன், நேற்று முன்தினம் நிகழ்ந்த சேவைத் தடைக்காக அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது.
இதனிடையே, மெத்தனமாக இருக்கக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் தமக்கும் போக்குவரத்து சேவை வழங்குநர்களுக்கும் ஒரு நினைவுறுத்தலாக அமைந்தது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டார்.
சேவைத் தடை குறித்து அதிருப்தி தெரிவித்து பலர் தமக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதே நேரத்தில் எஸ்எம்ஆர்டி ஊழியர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் அமைச்சர் ஓங் கூறினார்.
கடந்த ஆகஸ்ட்டில் போக்குவரத்து அமைச்சராக திரு ஓங் பதவியேற்றபின் நிகழ்ந்த முதல் சேவைத் தடை இது. ரயில்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின.