சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,933 ஆகியுள்ளது.
உள்ளூர் சமூகத்திலோ அல்லது விடுதிகளிலோ புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று பதிவான 6 கிருமித்தொற்று சம்பவங்களில் இரண்டு விடுதிகளில் பதிவானவை; நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்பிலானது.
இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய 35 வயது சிங்கப்பூரர், இந்தியாவிலிருந்து திரும்பிய 41 வயது நிரந்தரவாசி, ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து திரும்பிய 43 வயது எகிப்தியர், ஜெர்மனியிலிருந்து திரும்பிய 37 வயது ஆடவர் ஆகிய நால்வருக்கும் நேற்று கிருமித்தொற்று பதிவானது. எகிப்தியரும் ஜெர்மானியரும் வேலை அனுமதி அட்டையுடன் இங்கு பணியில் இருப்பவர்கள்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 40.36 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.12 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.