கிட்டத்தட்ட 470,000 ஊழியர்களுக்கு இம்மாதம் $810 மில்லியன் மதிப்பில் வேலைநலன் சிறப்புத் தொகை வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு அக்டோபரில் இத்தொகை கிடைக்கவுள்ளதாக அமைச்சு கூறியது.
இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து வழங்குதொகையை இந்தக் குறைந்த வருமான சிங்கப்பூரர் ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவர்களில் பெரும்பாலானோர் முன்னரே வேலைநலன் சிறப்புத் தொகைக்குத் தகுதிபெற்றவர்கள்.
அதன்படி 2019ஆம் ஆண்டில் செய்திருந்த வேலைக்காக இவ்வாண்டு ஜூலையில் அவர்களுக்கு முதல் வழங்குதொகையான $1500 கிடைத்திருக்கும். இறுதி வழங்குஇத்தொகையான மேலும் $1500ஐ அவர்கள் இம்மாதம் பெறவுள்ளனர்.
இத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் போடப்படும், அல்லது அவர்களின் வீட்டு முகவரிக்கு நவம்பர் 15ஆம் தேதிக்குள் காசோலையாக அனுப்பப்படும். 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைநலன் ஒரு நிரந்தரத் திட்டமாகும். குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் நிரப்புத்தொகை செலுத்தப்படுகிறது. இது அவர்களின் ஓய்வுக்காலத்திற்குச் சேமிக்க உதவும் என்று கூறப்பட்டது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட், ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று அறிவித்த தமது அமைச்சுநிலை அறிக்கையில், வேலைநலன் துணை வருமானத் திட்டத்திற்கு மேலும் 70,000 ஊழியர்கள் தகுதிபெறுவர் என்று தெரிவித்திருந்தார்.
வேலைநலன் சிறப்புத் தொகை பெறாத நிலையில், இவர்கள் 2020ஆம் ஆண்டில் செய்த வேலைக்காக வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவர் என்று அவர் கூறியிருந்தார்.
அறிமுகம் கண்டதிலிருந்து வழங்கப்பட்ட வேலைநலன் வழங்குதொகையின் மதிப்பு $6.8 பில்லியனாகி உள்ளது. இதுவரை 890,000 பேர் இத்திட்டம் வழி பலனடைந்துள்ளனர். ஊழியரணியின் ஆகக் குறைவான வருமானம் ஈட்டும் 20 விழுக்காட்டினராக உள்ள சிங்கப்பூரர் ஊழியர்களுக்குப் பலனளிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் தொடர்பில், திரு ஹெங் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். குறைந்த வருமான ஊழியர்களை உயர்த்தும் முக்கிய கொள்கை புத்தாக்கங்களில் வேலைநலன் திட்டமும் படிப்படியாக உயரும் சம்பள முறையும் அடங்கும் என்றார் அவர்.
உடனடி மற்றும் ஓய்வுக்காலத் தேவைகளுக்கு மத்திய சேமநிதி நிரப்புத் தொகையும் ரொக்கமான வழங்குதொகையும் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொள்ளைநோய் சூழலில் இவர்களுக்கு மேலும் உதவி நல்க பல திட்டங்கள் உள்ளதென அவர் கூறினார்.
“சிங்கப்பூரர்கள், குறிப்பாக குறைந்த வருமான ஊழியர்களுக்கும் நம்மிடையே உள்ள எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கும் இந்த நெருக்கடி காலத்தில் உதவுவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது,” என்றார் அவர்.