விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்ததற்காக தன்னை மன்னித்துவிடுமாறு, டுவிட்டரில் அந்தப் பதிவை நபர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான ‘800’ல் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததன் தொடர்பில் பல தரப்பினரும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். அதில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர், விஜய் சேதுபதியின் மகளின் தொடர்பில் ஆபாசமாக டுவிட்டர் பதிவில் மிரட்டி இருந்தார். இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதுடன் போலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, 800 படத்திலிருந்து விலகிவிட்டாதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை IBC தமிழ் எனும் தனியார் செய்தி நிறுவனம் பேட்டி கண்டது.
“இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கை பிரஜை நான்தான். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இதற்கு மன்னிப்பு கிடையாது என்பது தெரியும். நான் ஏன் அவ்வாறு பேசினேன் என்றால் கொரோனா தொற்று காரணமாக வீழ்ந்த பொருளாதாரத்தால் எனக்கு வேலை பறிபோனது. மேலும், விஜய் சேதுபதி இலங்கை யுத்தத்தைப் பற்றி தெரிந்தும் கூட இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்ற ஆதங்கத்திலே அவ்வாறு பதிவிட்டேன். இதற்காக விஜய் சேதுபதி, அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்,” என்று அந்தப் பேட்டியில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.