பெல்ஜியம் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடங்கா நிலையில் உச்சத்தை எட்டியுள்ளது. அதனையடுத்து அந்நாட்டில் புதிய முடக்கநிலையை அறிவிப்பது குறித்து அரசாங்கம் இன்று நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கவுள்ளது. 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்த நாட்டில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 100,000 பேரில் 1,390 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் தரவுகளின் பதிவு இதைக் காட்டுகிறது.
பெல்ஜியத்திற்கு அடுத்தபடியாக செக் குடியரசில் 100,000 பேரில் 1,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. ஆகையால், நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் அதிகமானோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெல்ஜியத்தில் அக்டோபர் 20ஆம் தேதி மட்டும் 18,000க்கும் மேலானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது அதற்கு முந்தைய உச்ச எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை எட்டு நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிக்கொண்டே உள்ளது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு 809 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 5,260 பேர் மருத்துவமனைகளில் கொவிட்-19 வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சரும் முன்னாள் பிரதமருமான சோஃபி வில்ம்ஸ் கொவிட்-19 நோய்த்தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார். இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெல்ஜியத்தின் லீஜ் நகரில்தான் புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை ஒன்று கூறியது.