உயர் ரத்த அழுத்தத்தைக்
கட்டுக்குள் வைத்திருக்க...
குடும்பத்தின் சுகாதாரப் பின்னணி, அதிக நடமாட்டம் இல்லாத வாழ்க்கைமுறை, புகைப்பிடித்தல், உடல் பருமன் ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம் வரும் அபாயம் அதிகம். ஆரோக்கிய உணவுமுறை, உடற்பயிற்சி, ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல், சுகாதாரப் பரிசோதனைக்குச் செல்வது முக்கியம்.
உணவு தயாரிப்பின்போது...
பாரம்பரிய இந்திய உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய், நெய், ஆகியவற்றின் அளவு அதிகமாக இருக்கக்கூடும். காப்பி, தேநீர், இனிப்பு வகைகள், சோறு, சப்பாத்தி போன்றவற்றில் இவை இருக்கலாம். இவற்றைத் தினமும் உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படலாம்.
இளம் வயதினரும் பக்கவாதமும்...
பக்கவாதம் எந்த வயதிலும் தாக்கலாம். வாழ்க்கைமுறை தெரிவுகள் (புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுமுறை) காரணமாக இருக்கலாம். வயது அதிகரிக்க, பக்கவாதம் வரும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். தகுந்த சிகிச்சைகளுடன் நோய் வரும் சாத்தியம் குறையும்.
பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள்...
ஒருபுறம் முகம் கோணலாகப் போவது, கை பலவீனமாகி எதையும் தூக்க முடியாமல் போவது, பேசுவதில் சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை ஒருவரிடம் கண்டால், உடனடியாக 995 என்ற எண்ணுக்கு அழைத்து மருத்துவ உதவியை நாடவும்.
பக்கவாதத்திலிருந்து குணமடைய...
பக்கவாதம் வந்தபின் நோயாளிகளுக்குச் சிகிச்சை அவசியமானது. நோயாளியின் உடல்நலத்தையும் பக்கவாதத்தின் கடுமையையும் பொறுத்து உடனடியாக சிகிச்சை தொடங்கிவிடும். ஒரு நோயாளி குணமடையும் பயணத்திற்கு ஒரு மருத்துவக் குழுவே தேவைப்படும்.
பராமரிப்பாளரின் பங்கு...
பக்கவாதம் கொண்டவர்கள் தகுந்த நிபுணருடன் உடற்பயிற்சி செய்யும்போது பராமரிப்பவர்களும் ஈடுபட்டு நோயாளிக்கு உதவலாம். அவர்களுக்கு மனதளவில் ஆதரவு தரும் வகையில், பராமரிப்பாளர்கள் பேசலாம். உடற்பயிற்சி, குடும்ப நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கலாம். அதே சமயம் தூக்கமின்மை, பசியின்மை, வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்கவும்.