பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் நேற்று இரண் டாவது நாளாக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கியப் படை மோசுல் நகருக்குள் முன்னேறிச் சென்ற போதிலும் போராளிகளிடமிருந்து அந்நகரை ஈராக்கியப் படையினர் கைப்பற்று வதற்குச் சில காலம் பிடிக்கலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் பீட்டர் குக் கூறினார்.
ஈராக் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு வரும் ஐஎஸ் போராளிகள் எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களிடமிருந்து மோசுல் நகரை மீட்க முடியும் என்று திரு பீட்டர் குக் சொன்னார். ஐஎஸ் போராளிகள் தற்போது ஈராக் ராணுவத்தை எதிர்த்து கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். மோசுல் நகருக்குள் நுழையும் ஈராக்கிய ராணுவ வாகனங்களை ஐஎஸ் போராளிகள் தாக்கி வருகின்றனர்.
இதனால் மோசுல் நகருக்கு வெகு அருகில் கடும் சண்டை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கின் 2வது பெரிய நகரான மோசுல் நகரை ஐஎஸ் போராளிகள் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வசம் கொண்டு வந்தனர். அப்போது முதல் போராளிகள் அந்நகரை தங்கள் கோட்டையாகக் கருதி வருகின்றனர்.
ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஈராக்கியப் படையினர் மோசுலுக்கு அருகே காணப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்