அடுத்த மாதம் 3ஆம் தேதி 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கும் ஜூரோங் பறவைப் பூங்கா, அதையொட்டி நுழைவுக் கட்டணங்களைக் குறைக்கவிருக்கிறது; பறவைகள் இடம்பெறும் சிறப்புக் காட்சிகளை நடத்தவிருக்கிறது.
2021 ஜனவரி மாதம் முழுவதும் உள்ளூர்வாசிகளுக்கு $2.50 விலையில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படும். 1971ஆம் ஆண்டில் இப்பூங்கா திறக்கப்பட்டபோது நுழைவுக்கட்டணம் இரண்டரை வெள்ளிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக பெரியவர்களுக்கு 32 வெள்ளியும், மூன்று முதல் 12 வயது வரையிலான சிறாருக்கு 21 வெள்ளியும், 60 வயதும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 15 வெள்ளியும் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன.
கொவிட்-19 சூழலில் கூட்டத்தை நிர்வகிக்கவும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளுக்கும் ஏதுவாக, நுழைவுச்சீட்டுகளுக்கு முன்பதிவு அவசியம் என்று சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.
ஜனவரியில் ‘பிக் ஜான்’ எனப் பெயர் கொண்ட ‘காக்கட்டூ’ வெண்கிளி பங்குபெறும் சிறப்பு ‘ஹை ஃபிளையர்ஸ்’ நிகழ்ச்சியை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
அத்துடன், கடந்த ஆண்டுகளில் பறவைப் பூங்காவின் உருமாற்றம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்கள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தொடக்க நாள்களில் பறவைப் பூங்கா எவ்வாறு இருந்தது, 1972ல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தாரின் வருகை முதலிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
வருகையாளர்கள் $50 பங்களித்து, அடுத்த ஆண்டில் அடையாளபூர்வமாக ஒரு செந்நாரையை (ஃபிளமிங்கோ) வளர்க்கலாம். ஒவ்வொரு பங்களிப்பிற்கும் ஒரு மின்னிலக்கச் சான்றிதழும் ஒரு செந்நாரை சாவி வளையத்திற்கான பற்றுச்சீட்டும் வழங்கப்படும்.
விலங்குகள் பராமரிப்பு, பூங்காக்கள் தொடர்பான ஆய்வு, கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் அந்தப் பங்களிப்புத் தொகை பயன்படுத்தப்படும் என்று வனவிலங்குக் காப்பகம் தெரிவித்து இருக்கிறது.
அடுத்த ஆண்டு பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள பறவைப் பூங்கா, மார்ச் மாதத்தில் தனது முதலாவது மின்னிலக்க அடிச்சுவட்டையும் அறிமுகப்படுத்தவுள்ளது.