பெங்களூரு: பசு வதையைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பித்து உள்ளது. அதற்கு ஆளுநர் வஜுபாய் வாலா ஒப்புதல் வழங்கி உள்ளார். இச்சட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வருவதாக கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.
இந்தச் சட்டத்தின்படி பசு மாடுகளைக் கொல்வது குற்றமாகும். வயது முதிர்ந்த மாடுகளை விவசாயிகள் வளர்க்க இயலாமல் போனால் அவற்றை கோசாலையில் விட்டுவிட வேண்டும்.
சட்டத்தை மீறி பசுமாடுகளைக் கொல்வோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.பசு வதைச் சட்டம் அமலுக்கு வந்தாலும் மாட்டிறைச்சி உண்ணத் தடை இல்லை. அதேபோல எருமை மாடுகளைக் கொல்ல முன் அனுமதி பெறலாம். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இச்சட்டத்தை எதிர்க்கின்றன.
மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் கூறுகையில், பசு வதை தடைச் சட்டத்துக்கான விதிகள் வெகுவிரைவில் வகுக்கப்படும். போலிஸ் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு பசு உள்ளிட்ட கால்நடைகள் வதை செய்யப்படுவதிலிருந்து காக்க வேண்டும்,” என்றார்.